சூறாவளியால் பாம்பனில் படகு, கப்பல் காத்திருப்பு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசுவதால் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் இரு பாய்மரப் படகுகள், கப்பல் காத்திருக்கிறது.அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மே 24ல் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.இந்நிலையில் கர்நாடகா மங்களூருவில் இருந்து புறப்பட்ட இரு பாய்மரப் படகுகள், மும்பையில் இருந்து புறப்பட்ட ஒரு இழுவை கப்பல் ஆந்திரா காக்கிநாடா மற்றும் கடலுார் செல்ல மே 26ல் பாம்பன் துறைமுகம் வந்தன. பாம்பனில் தொடர்ந்து சூறாவளி வீசுவதால் ரயில் பாலத்தை கடந்து செல்ல அனுமதி இல்லை. காற்றின் வேகம் தணிந்ததும் பாலம் திறக்கப்பட்டு கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதில் உள்ளோர் பாம்பன் கடலில் காத்திருக்கின்றனர்.