கலெக்டர் அலுவலகத்திற்கு தனி போலீஸ் ஸ்டேஷன் கோரிக்கை
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை தனியாக பிரித்து கலெக்டர் அலுவலக போலீஸ் ஸ்டேஷனை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில் நகர் பகுதியில் பஜார் போலீஸ் ஸ்டேஷன், பி.1 போலீஸ் ஸ்டேஷன் என இரு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் அதிகமான பகுதிகளை கொண்டதாகவும், குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதியாகவும் உள்ளது. கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. ராமநாதபுரம் புறநகர் பகுதிகளை பெரும்பான்மையாக கொண்டுள்ளதால் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளை இரண்டாக பிரித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தனியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் மாதவன் கூறியதாவது:கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் அதிகளவில் கிராமங்களையும், நகர் பகுதிகளையும் கொண்டுள்ளது. இதனால் இங்கு குற்ற வழக்குகளை நிர்வாகம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.எனவே ராமநாதபுரம் புறநகர் பகுதிகளை தனியாக பிரித்தும், கலெக்டர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து கலெக்டர் அலுவலக போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும்.அப்படி உருவாக்கப்படும் பட்சத்தில் குற்றங்களை தடுக்க போதுமான போலீசார், அதிகாரிகள் இருப்பதால் ஓரளவுக்கு குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.