கலெக்டர் அலுவலக மரத்தில் ஏறி முதியவர் தற்கொலை முயற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த தர்மராஜ் 60, இவரது நிலத்தை மீட்டுத்தராமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக விரக்தியில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.தொண்டி தெற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் 60. இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தார்.அப்போது திடீரென அந்த வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி துாக்கிட முயன்றார். இதை பார்த்த மக்கள் கூச்சலிட்டனர்.போலீசார் சமரசம் பேசியும் கீழே இறங்கி வர தர்மராஜ் மறுத்தார். இதையடுத்து போலீஸ்காரர் கண்ணன் மரத்தில் ஏறி தர்மராஜை தடுத்தார்.அப்போது தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் வந்து அவரை மீட்டு கீழே இறக்கினர். தர்மராஜை கேணிக்கரை போலீசார் விசாரணை செய்தனர்.இதில், தர்மராஜ் தனது தொண்டி சின்னதொட்டி குரூப் 2 ஏக்கர் இடம் அடுத்தவரின் பெயருக்கு பட்டா மாறிவிட்டது. இது தொடர்பாக தாசில்தார், கலெக்டர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் விரக்தி அடைந்து விட்டதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.