எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் வைகை ஆற்றில் அவதாரக் காட்சி
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில், தினமும் அவதார சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 118வது வைகாசி பவுர்ணமி வசந்த உற்ஸவ திருவிழா நடக்கிறது. இதில் வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் இறங்கிய பெருமாள், தினமும் இரவு அவதார சேவையில் காட்சியளித்தார். ஜூன் 12 முதல் 14 வரை 3 நாட்களும் இரவு வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள துடுகுச்சி, மகாலட்சுமி, மாணிக்கா மண்டகப்படிகளில் பல்வேறு அவதாரத்தில் அருள்பாலித்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி, ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை அணிந்து அரவிந்த் மண்டகப்படியில் இருந்து புறப்பாடாகி இரவு 10:00 மணி தொடங்கி விடிய, விடிய நகர் வலம் வந்தார். இன்று (ஜூன் 16) காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் பூப்பல்லக்கில் கோயிலை அடைகிறார். இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.