குண்டாறு வரத்து கால்வாயில் கருவேலம் மரங்கள் ஆக்கிரமிப்பு
கமுதி: கமுதி குண்டாறு வரத்து கால்வாய் துார்வாரப்படாததால் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி இருப்பதால் தேங்கும் தண்ணீரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.மதுரை வைகை ஆற்றில்இருந்து பிரிந்து வரும் கிளை ஆறுதான் குண்டாறு. இதன் மூலம் வரும் தண்ணீர் கமுதி அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு விவசாயம், குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக கமுதி கோட்டைமேடு அருகே பெரிய அணைக்கட்டு உள்ளது. இதன் வழியாக முதுகுளத்துார், சாயல்குடிக்கு தண்ணீர் பிரித்து விடப்படுகிறது. தற்போது குண்டாறு வரத்து கால்வாய் கடந்த பலஆண்டுகளாகவே துார்வாரப்படாமல் இருப்பதால் ஆங்காங்கே சீமைகருவேல் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. வரத்து கால்வாய் மணல்மேடாகி உள்ளது. இதனால் மழை பெய்தால் தேங்கும் தண்ணீரை கூட விவசாயிகள் பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது.கண்மாய்களும் வறண்டு காணப்படுகிறது. தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் குண்டாறு வரத்து கால்வாய் துார்வரப்படாமல் உள்ளது. எனவே சீமைகருவேல் மரங்களை அகற்றி துார்வார வேண்டும்என விவசாயிகள் வலியுறுத்தினர்.