வயல்களை வன விலங்குகளிடமிருந்து வேலியிட்டு பாதுகாக்கும் விவசாயிகள்
பரமக்குடி: பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் வயல்களை வன விலங்குகள் அழிப்பதை தடுக்க விவசாயிகள் வேலியிட்டு பாதுகாக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. இங்கு பிரதானமாக நெல், மிளகாய், பருத்தி உட்பட சிறுதானியங்கள், கரும்பு, கடலை மற்றும் தோட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.இந்நிலையில் பெரும்பாலான விளை நிலங்களில் தண்ணீரின்றி பராமரிக்க முடியாமல் சீமைக்கருவேல மரங்களை வளர்த்துள்ளனர். தற்போது கண்மாய்களில் தண்ணீர் பெருகி உள்ளது. இதனால் மான், காட்டுப்பன்றிகள், மயில் உள்ளிட்டவை காட்டுப்பகுதியில் இருந்து விளைச்சல் நிலங்களை நோக்கி வருகின்றன. அவை இரை தேடும் நிலையில் பயிர்கள் சேதம் அடைகின்றன.தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்துகின்றன. இது குறித்து வனச்சரக அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒவ்வொரு முறை தெரிவிக்கும் போதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகின்றனர்.இச்சூழலில் சில விவசாயிகள் தங்களது நிலங்களை முள்வேலி இட்டு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இவ்வாறான வேலி அமைக்க பலஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி உள்ளதால் நஷ்டத்தில் விவசாயம் செய்வதாக தெரிவித்தனர்.எனவே வன விலங்குகளிடமிருந்து விளை நிலங்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.