காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவை அமல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்:பயிர்கள் சேதமடைந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. நன்கு விளைந்த நெல், சோளம், நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை அவை சேதப்படுத்துகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயிகள் காயமடைந்துள்ளனர். பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன ரேஞ்சர், பாரஸ்டர், கார்டு ஆகியோருக்கு பகுதிவாரியமாக தேனி வைகை அணைக்கட்டு, சென்னை ஆகிய இடங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் துப்பாக்கிகள் வழங்கப்படவில்லை. சுடும் பணியை கண்காணிக்க பொதுமக்கள், மாவட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கின்றன. திட்டத்தை அமல்படுத்துவதில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கமுதி தரக்குடியை சேர்ந்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம் கூறுகையில், கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட இடங்களில் காட்டுபன்றிகளால் ஆண்டுதோறும் மகசூல் இழப்பை விவசாயிகள் சந்திக்கின்றனர். எனது பருத்திசெடிகளில் காய்களை சேதப்படுத்தியுள்ளன. எனவே காட்டுபன்றிகளை சுடும் உத்தரவை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.--