கடலோரப் பகுதியில் குவியும் குப்பையால் உயிரினங்களுக்கு ஆபத்து
வாலிநோக்கம்: மாவட்டத்தில் கடலோரப்பகுதிகளில் குவியும் குப்பை காற்றில் கடலில் கலப்பதால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஆபத்துள்ளது. குறிப்பாக வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையோர மணல் பகுதிகளில் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. அவற்றை அகற்றிட வேண்டும். குப்பை கொட்டுவதற்கு தடைவிதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையோரப் பகுதிகளில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடலின் அழகை ரசிப்பதற்காக வருகின்றனர். இந்நிலையில் கடற்கரையோர பகுதியில் அதிகளவு பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை கொட்டுவதால் காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பை நேராக கடலுக்குள் செல்கின்றன.இதனால் கடலில் வசிக்கக்கூடிய அரியவகை உயிரினங்களான டால்பின், கடல் பசு, கடல் ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் அவற்றை உண்ணும் பொழுது உயிரிழக்கும் அபாயம் நேரிடுகிறது. மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து பணிகள் மேற்கொள்ள வேண்டிய திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாக உள்ளது.இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே வாலிநோக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் கடற்கரையோரப் பகுதிகளில் கொட்டப்படும் குப்பையை அகற்றிட வேண்டும். தீர்வு காணும் விதமாக குப்பைத் தொட்டிகளை வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.