பதவி உயர்வை தடுக்க அவதுாறு; புள்ளியியல் அதிகாரி விளக்கம்
ராமநாதபுரம்; என் பதவி உயர்வை தடுக்கும் நோக்கத்தில் பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர். அதில் உண்மை இல்லை என ராமநாதபுரம் மாவட்ட புள்ளியில் துறை துணை இயக்குநர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 29 ஆண்டுகளாக நேர்மையாக பணிபுரிகிறேன். அரசிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளேன். 2021 முதல் பதவி உயர்விற்காக காத்திருக்கிறேன். பணியாளர்களை தரக்குறைவாக பேசியது இல்லை.பெண் பணியாளர்களிடம் மரியாதையாக நடந்து கொள்கிறேன். மாதந்தோறும் 'பெண்டிங்' இல்லாமல் சம்பளம் வழங்கப்படுகிறது. விடுமுறை வழங்க மறுத்தது இல்லை. திருநெல்வேலி மண்டல இணை இயக்குநராக கூடுதல் பொறுப்பில் உள்ளேன். இணை இயக்குநர் பதவி உயர்வு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளேன். இந்நிலையில் சிலர் வேண்டும் என்றே ஊடகங்கள் வழியாக அவதுாறு பரப்பி எனது பதவி உயர்வை தடுக்கின்றனர். ராமநாதபுரத்திற்கு யாரும் வராத காரணத்தால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகிறேன். நான் வேறு மாவட்டத்தில் பணிபுரிய தயாராக உள்ளேன். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளேன் என்றார்.