கடல் சீற்றத்தால் இலங்கையில் கரை ஒதுங்கிய குமரி படகு
ராமநாதபுரம்:கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி அருகே குளச்சல் தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த பைபர் படகு இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலையில் கரை ஒதுங்கியது. பேசாலையில் உள்ள 4 வது மணல் திட்டு பகுதியில் பைபர் படகு ஆட்கள் இல்லாமல் கரை ஒதுங்கியது. இதனை பறிமுதல் செய்து இலங்கை கடற்படையின் விசாரித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள தேங்காய்பட்டினம் வல்லவிளை பகுதியில் கரையில் நிறுத்தப்பட்டிருந்த சுனாமி காலனியை சேர்ந்த சிலுவை மாரி என்பவருக்கு சொந்தமான பைபர் படகு இது என்பது தெரியவந்தது.கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட தனது பைபர் படகை காணவில்லை என சிலுவைமாரி புகார் தெரிவித்துள்ளார். மேல்விசாரணை நடக்கிறது.