அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பராமரிப்பில்லை; தரை தளம் சேதம்: வாகனங்களுக்கு இடையூறு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் பெயரளவில் பராமரிப்பு பணிகள் நடக்கும் நிலையில் அவசர சிகிச்சை பிரிவு செல்லும் பகுதியில் தரைத் தளம் பெயர்ந்துள்ளதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் ரூ.154.84 கோடியில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 2023 ஆக., 25 ல் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனால் திறக்கப்பட்டது.புதிய கட்டடம் திறக்கப்பட்டதில் இருந்து அக்கட்டத்தில் தொடர்ந்து பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் கசிவு ஏற்படுவது, கழிவறை தண்ணீர் வார்டுகளில் புகுவது, பாதுகாப்பு குறைபாடு என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.தற்போது முறையான பராமரிப்பின்றி லிப்டுகள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் வார்டு பகுதியில் தரை தளங்கள் பெயர்ந்து சேதமடைந்து வருகிறது. இதில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.தினமும் அவசர சிகிச்சை பிரிவுக்கு பலமுறை ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருகின்றன. இதனால் வாகனங்கள் சறுக்குப்பாதையில் பயணித்து அவசர வார்டுக்கு செல்லும் வழியில் இது போன்று தரை தளம் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் நிலையும் உள்ளது.மாவட்டம் முழுவதும் இருந்து நோயாளிகள் வரும் நிலையில் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் பெயரளவில் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை சரி செய்ய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.