கடையில் துளையிட்டு பணம் அலைபேசி திருடியவர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடையின் கூரையில் துளையிட்டு பணம், அலைபேசி திருடியவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் பட்டணம்காத்தன் மெயின் ரோடு முனியசாமி நகர் பகுதியில் தனியார் ஹார்டுவேர் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. கடையில் பணிபுரியும் மருதுபாண்டியன் மே 14 இரவு கடையை பூட்டிவிட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் கடையை திறந்த போது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. கடையின் கூரையில் துளையிடப்பட்டிருந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் கடம்பா நகர் 8வது தெருவை சேர்ந்த ரவிக்கு தெரிவித்தார். கடைக்கு வந்து பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த 11 ஆயிரத்து 600 ரூபாய், அலைபேசி காணாமல் போனது தெரிய வந்தது. ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் உரிமையாளர் ரவி புகாரில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். கடையில் பதிவாகியிருந்த கைரேகை, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நபரை தேடி வந்தனர்.இந்த திருட்டில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அண்ணாநகர் தெற்குமனையடிப்பட்டி முருகன் மகன் சுந்தரேஸ்வரன் 32, ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் சென்னை பரங்கிமலைப்பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. தனிப்படை போலீசார் பரங்கிமலையில் சுந்தரேஸ்வரனை கைது செய்தனர்.-