கிராமக் கண்மாய்களை இணைக்கும் திட்டம் செயல்படுத்துங்க ஆபிசர்ஸ்... பராமரிப்பின்றி தண்ணீரை சேமிப்பதில் சிக்கல்
ராமநாதபுரம், அக்.16- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறை கட்டுப்பாட்டில் உள்ள 50 ஏக்கருக்கும் மேல் உள்ள கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் (நீர்வளம்) இணைக்கும் திட்டம் துவக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் உள்ளதால் இதனை விரைவில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 33 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி, 50 ஆயிரம் எக்டேரில் மிளகாய், 25 ஆயிரம் ஏக்கரில் சிறுதானியங்கள், 10 ஆயிரம் ஏக்கரில் பயறு வகைகள், 6000 ஏக்கரில் எண்ணெய்வித்துகள் பயிரிடுகின்றனர். ஆண்டுதோறும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை சராசரியாக 827 மி.மீ., பெய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மழைநீரை சேமிக்க பொதுப்பணித்துறையின் கீழ் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறுபாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள் என 5660 நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் ஊரக வளர்ச்சிதுறை பராமரிப்பில் உள்ள 1122 சிறுபாசன கண்மாய்களில் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் முள்செடிகள் வளர்ந்தும், குப்பை கொட்டியும் வீணாகியுள்ளன. இது தொடர்பாக ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து 2023ம் ஆண்டில் 50 ஏக்கரில் உள்ள கண்மாய்களை மட்டும் பொதுப்பணித்துறையுடன் (நீர்வளம்) இணைத்து பராமரிக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதுபோன்ற கண்மாய்களை கணக்கெடுக்க அப்போதைய கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார். அதன் பிறகு அப்படியே திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தாலும் கிராமங்களில் உள்ள பாசன குளம், கண்மாய்களில் இந்த ஆண்டும் முழுமையாக நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 50 ஏக்கருக்கும் மேல் உள்ள கண்மாய்களை பொதுப்பணித்துறையுடன் இணைக்கும் திட்டத்தை நடப்பு ஆண்டில் செயல்படுத்த புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.