பரமக்குடி உழவர் சந்தை சுற்றுச்சுவருக்கு ஆபத்து
பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் இருந்து செல்லும் மருத்துவமனை ரோடு பகுதியில் உழவர் சந்தை செயல்படுகிறது. இதன் அருகில் நகராட்சி வணிக வளாகம், சிறுவர் பூங்கா உள்ளது. மேலும் இந்த ரோடு வழியாக ஏராளமான தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் செல்கின்றனர்.இந்நிலையில் உழவர் சந்தையை ஒட்டிய காம்பவுண்ட் சுவர் சேதமடைந்து ஆங்காங்கே இடிந்து விழுந்தது. இதனை சீரமைக்க வலியுறுத்தி அவ்வப்போது தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் கடந்த மாதங்களில் சுற்றுச்சூழல் பணி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.வாறுகாலில் கழிவுநீர் முறையாக செல்லாமல் மீண்டும் அப்பகுதியில் தேங்குவதால் சுற்றுச் சுவருக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் சுவர் இடிந்து விழும் நிலையில் அவ்வழியாக செல்வோருக்கு ஆபத்து காத்திருக்கிறது.மேலும் உழவர் சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கும் சிக்கல் ஏற்படும். ஆகவே சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.