நாடு முழுவதும் 500 வாகனங்களில் வீடு தேடி பாஸ்போர்ட் சேவை தலைமை அதிகாரி தகவல்
ராமேஸ்வரம் :''நாடு முழுவதும் 500 வாகனங்களில் வீடு தேடி பாஸ்போர்ட் வழங்கும் சேவை திட்டம் துவக்கப்பட்டுள்ளது ''என மத்திய தலைமை பாஸ்போர்ட் அதிகாரி கே.ஜே. ஸ்ரீனிவாசா தெரிவித்தார்.மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் முதன் முதலாக வீடு தேடி பாஸ்போர்ட் வழங்கும் சேவை வாகனத்தை நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனையில் ஸ்ரீனிவாசா கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின் ராமேஸ்வரம் புதுரோடு ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் இத்திட்டத்திற்கான வாகன துவக்க விழா நடந்தது. இதில் ஸ்ரீனிவாசா பேசியதாவது :மதுரை மண்டலத்தில் முதன் முதலாக தனுஷ்கோடி அருகே மீனவ கிராமத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வழங்கும் சேவை வாகனம் துவக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சுற்றுலா செல்வதற்கு மட்டும் இல்லை. வெளிநாடுகளில் தொழில் துவங்க, உயர்கல்வி படிக்க, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது.நாடு முழுவதும் இதே போல் 500 வாகனங்களில் பாஸ்போர்ட் வழங்கும் சேவை திட்டத்தை துவக்கி உள்ளோம். இதன் மூலம் கிராம மக்களும் எளிதில் பயன்பெற வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன், துணை அலுவலர் அழகேசன், கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.