பரமக்குடி அருகே நெசவாளர் குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்; முதுகுளத்துார் மக்கள் அச்சம்
பரமக்குடி : பரமக்குடி ஒன்றியத்தில் முதுகுளத்துார் ரோட்டோரம் மழை நீர் தேங்கும் நிலையில் நெசவாளர் குடியிருப்பு உட்பட மக்கள் அச்சத்தில் உள்ளனர். பரமக்குடியில் இருந்து முதுகுளத்துார் ரோட்டோரம் வெங்கடேஸ்வரா காலனி, சத்தியமூர்த்தி நகர், புண்ணிய பூமி நகர் என நெசவாளர் குடியிருப்புகள் உள்ளன. மேலும் அப்பகுதியில் ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு காலனிகள் உள்ளதுடன், ஆர்.டி.ஓ., அலுவலகம், தனியார் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் மழை நீர் வழிந்தோட முறையாக வடிகால் வசதி இருந்த நிலையில் தற்போது அனைத்து வழித்தடங்களையும் ரோடுகள் அமைத்து தடுத்துள்ளனர். இதனால் சிறிதளவு மழை பெய்யும் சூழலிலும் பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. தொடர்ந்து மழைக் காலங்களில் நெசவுத்தொழில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் இது போன்று தேங்கும் நீரால் ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதனால் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன் குழந்தைகள் துவங்கி முதியவர்கள் வரை அச்சத்துடன் வாழ்கின்றனர். மேலும் நெசவுத் தொழில் நடத்த முடியாத சூழலில் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உண்டாகிறது. இத்துடன் அருகில் உள்ள அனைத்து குடியிருப்பு மக்களும் வீடுகளை சூழ்ந்து நிற்கும் நீரை வெளியேற்ற வழி தெரியாமல் தவிக்கின்றனர். ஆகவே ஒன்றிய மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் முறையாக வழிந்தோட செய்வதுடன் விவசாய பணிகளுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.