இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு அபராதத் தொகையை ரத்து செய்ய கோரிக்கை
ராமநாதபுரம் : இலங்கை சிறையில் உள்ள பாம்பனை சேர்ந்த 10 மீனவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் விதித்துள்ள பல கோடி ரூபாய் அபராதத் தொகை ரத்து செய்ய வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். கடந்த மாதம் ஆக.,5ல் உரிய அனுமதி சீட்டு பெற்று பாம்பன் துறைமுகத்தில் இருந்து தென்கடல் பகுதிக்கு சென்ற போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்களையும் விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. செப்.,1ல் இலங்கை நீதிமன்றம் 10 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் தலா 1 கோடியே 40 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் 10 மீனவர்களும் 18 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எங்களால் அவ்வளவு தொகையை கட்ட முடியாது எனவும், இலங்கை நீதிமன்றம், அந்நாட்டு அரசும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.