வண்ணாங்குண்டுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்
திருப்புல்லாணி:- திருப்புல்லாணி அருகே மேதலோடையில் இருந்து வண்ணாங்குண்டு செல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு டவுன் பஸ்சை இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேதலோடை பனைத் தொழிலாளர்கள் சங்க வட்டார தலைவர் கலைவாணி கூறியதாவது: மேதலோடை சுற்றுவட்டார கிராமங்களான வடக்கு மேதலோடை, அய்யனார்புரம், காடுகாவல்காரன் வலசை, உமையன் வலசை, மாரி வலசை, பன்னிவெட்டி வலசை, ஈசுப்புலி வலசை, கொட்டியக்காரன் வலசை, கொதக்கோட்டை, உத்தரவை உள்ளிட்ட 11 கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மாலை நேர வகுப்பு முடிந்து ஊருக்கு செல்வதற்கு உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் நடந்தும் 5 முதல் 7 கி.மீ., தொலைவிற்கு சைக்கிளிலும் வருகின்றனர்.எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாலை 5:00 மணிக்கு வண்ணாங்குண்டு முதல் அரசு டவுன் பஸ் எண் 17 சம்பந்தப்பட்ட கிராமங்கள் வழியாக செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து ராமநாதபுரம் நகர் போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றார்.