வங்கியில் கணக்கு துவங்க மாணவர்கள் அலைக்கழிப்பு
சாயல்குடி: சாயல்குடி அருப்புக்கோட்டை சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர். இந் நிலையில் புதியதாக வங்கி கணக்கு துவங்குவதற்கு வரும் மாணவர்கள், மக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சாயல்குடி பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பெரும்பாலானோர் ஐ.ஓ.பி., வங்கியில் வாடிக்கையாளராக உள்ளனர். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்பதால் பள்ளி வேலை நேரத்தில் கூட வங்கி கணக்கு துவங்குவதற்காக வருகின்றனர். இந்நிலையில் மாண வர்கள் மற்றும் விவரம் அறியாத முதியவர்களிடம் வழிகாட்ட கூட ஆளின்றி உள்ளதால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்டால் சரியான பதில் கூறாமல் தொடர் அலைக் கழிப்பிற்கு ஆளாகின்றனர். முதல் நாள் சொல்லிய ஆவணத்திற்கு மறுநாள் கூடுதல் ஆவணங்களை ஏன் கொண்டு வரவில்லை என பேசுகின்றனர். இதனால் பள்ளிக்கு விடுப்பு எடுத்து வங்கி கணக்கு துவங்க மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே ஐ.ஓ.பி., நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமித்து மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றார்.