கடனை திருப்பி தராமல் ஏமாற்றிய வாலிபர் கொலை: மூவர் கைது
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் வாங்கிய கடனை திருப்பி தராமல் ஏமாற்றிய வாலிபரை, அடித்துக்கொலை செய்து உடலை கடற்கரையில் வீசிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேரை தேடுகின்றனர்.ராமநாதபுரம் திணைக்குளம் நாடார் குடியிருப்பு கடற்கரையில் காயங்களுடன் வாலிபர் உடல் கிடந்தது. திருப்புல்லாணி போலீசார் விசாரணையில் ராமநாதபுரம் கான்சாகிப்தெருவை சேர்ந்த கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா 31, எனத் தெரியவந்தது. இவ்வழக்கில் ராமநாதபுரம் சின்னக்கடை தெருவை சேர்ந்த முகமது அனஸ் 32, வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த முகமது ஷாரூக்கான் 26, வடக்குத்தெருவை சேர்ந்த சிவபிரசாத் 26, ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். * காரில் கடத்தி சென்று கொலை: இதில், செய்யது அப்துல்லா ராமநாதபுரத்தில் அலைபேசி விற்பனை கடை வைத்திருந்தார். ஆன்- லைன் வர்த்தக மேம்பாட்டிற்காக பலரிடம் ரூ.பல லட்சம் கடன் வாங்கினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை கட்ட முடியாமல் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். மே 16 ல் வீட்டிலிருந்த செய்யது அப்துல்லாவை கடன் கொடுத்த நபர்கள் காரில் அழைத்து சென்றனர். செய்யது அப்துல்லா தன்னிடம் கடன் பெற்றவர்கள் திருப்பி தரவில்லை, ஏமாற்றுகின்றனர். ஏமாற்றியவர் அழகன்குளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.அங்கு செய்யது அப்துல்லாவை அழைத்து சென்று கடன் கொடுத்தவர்கள் பற்றி விசாரித்தனர். அப்படி ஏதுவும் இல்லை என தெரியவந்தது. செய்யது அப்துல்லா ஏமாற்றுவதை அறிந்து அவரை மண்டபம் அருகேயுள்ள மரைக்காயர்பட்டினம் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு அவரை அடித்துக்கொலை செய்தனர். பின் அவரது உடலை படகில் எடுத்து சென்று திணைக்குளம் நாடார் குடியிருப்பு பகுதி கடற்கரையில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இவ்வழக்கில் மேலும் 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். * உறவினர்கள் கோரிக்கை: செய்யது அப்துல்லா குடும்பத்தினர் எஸ்.பி., அலுவலகத்தில் கொலையில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாங்கிய கடனுக்காக சொத்துக்கள், நகைகளை பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தி சென்று சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். அனைவரையும் கைது செய்ய வேண்டும், என மனு அளித்தனர்.