உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் போதிய வடிகால் வசதிகளின்றி தொடரும் துயரம்  

ராமநாதபுரத்தில் போதிய வடிகால் வசதிகளின்றி தொடரும் துயரம்  

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் போதிய மழைநீர் வடிகால் வசதியின்றி சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. வடிகால் வசதியின்றி நகர், புறநகர் ரோடு, வீதிகளில் தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.நேற்று மதியம் 1:30 மணிக்கு துவங்கி ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சிகளில் மழை நீர் செல்ல வழியில்லாமல் குளம் போல ரோடுகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியது.குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கியதால் பயணிகளும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கிய நீரால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டனர். ரயில்வே பீடர் ரோட்டில் கீழக்கரை பாலத்திற்கு கீழ், ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர் ரோட்டில் குளம்போல தேங்கியது. இப்பகுதியில் நடந்து செல்பவர்களும், டூவீலர்களில் சென்றவர்களும் அவதிக்குள்ளாகினர். அரண்மனை பகுதியில் தேங்கிய மழை நீரால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். போதிய வடிகால் வசதியின்றி மிதமான மழை பெய்தால் கூட தண்ணீர் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் குளம்போல தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.எனவே மழைநீரை தடையின்றி ஊருணிகளில் சேமிக்க வாய்க்கால்களை செப்பனிடவும், ஆக்கிரமப்புகளை அகற்றவும் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை