முளைத்த, காய்ந்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
ராமநாதபுரம்: மழைநீரில் மூழ்கி மீண்டும் முளைத்த நெற்பயிர் மற்றும் போதிய தண்ணீரின்றி கருகிய நெற்பயிருக்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் சீனாங்குடியை சேர்ந்த விவசாயி மாரியம்மாள் காய்ந்த நெற்பயிருடன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:இரண்டு ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்தேன். சீனாங்குடி கண்மாய் நீரை திறந்துவிடாததால் ஒன்றரை ஏக்கரில் நெற்பயிர்கள் கருகி சாவியாகிவிட்டன. பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.செங்குடி குரூப் விவசாயி ஆரோக்கியம் மனுவில், மீண்டும் முளைத்துள்ள நெற்பயிருடன் அளித்த மனுவில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை சமயத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி தற்போது மீண்டும் முளைத்துவிட்டது. அதிகாரிகள் பார்வையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிவாரணம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.