எமனேஸ்வரத்தில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம் இன்று வசந்த உற்ஸவ விழா துவக்கம்
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது.எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 223 வது வைகாசி பிரம்மோற்ஸவ விழா நடந்தது.மே 31ல் கருட கொடியேற்றப்பட்டு விழா துவங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி வலம் வந்தார்.ஜூன் 7ல் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருக்கல்யாணம் நடந்தது.ஜூன் 8 பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் ரத வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு ஏராளமானோர் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பின்னர் கோயிலில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நேற்று காலையில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெற்றது. வைகாசி பவுர்ணமி வசந்த விழா
இன்று காலையில் 118 வது வைகாசி வசந்த உற்ஸவம் விழா கும்ப திருமஞ்சனத்துடன் துவங்குகிறது.நாளை அதிகாலையில் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லாக்கில் எழுந்தருளுகிறார்.காலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்குகிறார். குதிரை வாகனத்திலும், மாலை 5:00 மணிக்கு வைகையில் திருச்சப்பரத்தில் சேவை சாதிக்கிறார். இரவு எமனேஸ்வரம் வண்டியூரை அடைந்து அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. ஜூன் 12 சேஷ வாகனத்தில் அலங்காரமாகி, இரவு மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தும், விடிய விடிய அவதார நிகழ்ச்சி நடக்கிறது.கருட, அனுமார் வாகனங்களில் சேவை சாதிக்கும் பெருமாள், ஜூன் 15 இரவு மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகையில் இருந்து நகர்வலம் செல்கிறார்.ஜூன் 16ல் கோயிலை அடைந்து, அன்று இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஜூன் 17ல் உற்ஸவ சாந்தியும், மறுநாள் கந்தவடி விழாவுடன் வசந்த உற்ஸவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்கின்றனர்.