அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் செல்வநாயகிபுரம் கிராம மக்கள்
சாயல்குடி, : சாயல்குடி பேரூராட்சி செல்வநாயகிபுரம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.சாயல்குடி பேரூராட்சி வார்டு 4ல் செல்வநாயகிபுரம், சண்முக குமாரபுரம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயம், பனை சார்ந்த தொழில் செய்கின்றனர். இங்கு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு இல்லாததால் சிரமப்படுகின்றனர். மழைகாலங்களில் வடிகால் வசதியின்றி தண்ணீர் செல்ல வழியின்றி சேறும் சகதியுமாக உள்ளது. எனவே எங்களது அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றி தாருங்கள் என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். செல்வநாயகி புரம் விவசாயி முனியசாமி கூறியதாவது:அத்தியாவசிய தேவையான சாலை வசதியின்றி குண்டும் குழியூமாக உள்ளது. மின்கம்பங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 2 லட்சம் லி., மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவங்கியது. தற்போது வரை ஆமை வேகத்தில் பணி நடக்கிறது.எனவே பணிகளை விரைந்து முடித்து இப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தொட்டி அமைக்கும் இடத்தில் திட்ட மதிப்பீடு எதுவும் இல்லை. சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் எங்கள் பகுதி கவுன்சிலரின் கோரிக்கையை கேட்டு பணிகளை முடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், செல்வநாயகிபுரம் மற்றும் சண்முக குமாரபுரம் மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு விரைவில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.