பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா
பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து கவசம் சாற்றி மகா தீபாரதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயில் விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பரமக்குடி ஈஸ்வரன் கோயில் விநாயகர் சன்னதியில் அபிஷேகம் நிறைவடைந்து தீபாரதனைகள் நடந்தன. மாலையில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். இதேபோல் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் விநாயகர் வழிபாடு செய்ய களிமண் விநாயகரை ஆர்வமுடன் மக்கள் வாங்கிச் சென்றனர். ஹிந்து முன்னணி சார்பில் பரமக்குடி நகர் முழுவதும் 57 இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதுடன், திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெருமாள் கோயில் படித்துறையில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.