உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குதிரைமொழி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் எப்போது; அமைச்சரின் அறிவிப்புடன் நின்று போன மர்மம்

குதிரைமொழி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் எப்போது; அமைச்சரின் அறிவிப்புடன் நின்று போன மர்மம்

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் துவக்கப்படுவது எப்போது. சட்டசபையில் அறிவிக்கப்பட்டும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதியளித்த போதும் நின்று போனதால் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் நான்கு நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 429 கிராம ஊராட்சி மக்கள் பயனடைகின்றனர். இதே நேரத்தில் இதில் போதுமான குடிநீர் கிடைக்காததால் மீண்டும் இரண்டாவதாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 2 நகராட்சிகள் 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில் ரூ.2819.78 கோடியில் பணிகள் நடந்து வருகிறது.மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியதாக தெரியவில்லை. காவிரி ஆற்றையும், வைகை ஆற்றையும் நம்பியே கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளன. கடலோரப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் 1999 ல் தி.மு.க., ஆட்சியில் ரூ.39.5 கோடி மதிப்பீட்டில் நரிப்பையூரில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் தனியார் நிறுவனத்தால் பராமரிப்பு செய்யப்பட்டு கடலாடி, முதுகுளத்துார், கமுதி தாலுகாக்களில் உள்ள 290 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

முடக்கம்

இத்திட்டத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் 2006 முதல் முடக்கப்பட்டது. இதன் காரணமாக கடல் நீரை குடிநீராக்கும் பிளான்டில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் துருப்பிடித்து பழைய இரும்புக்கு கூட விற்க முடியாத நிலையில் இத்திட்டம் முற்றிலும் முடங்கியது. இன்றும் நரிப்பையூர் கூட்டுக்குடிநீர் திட்ட இயந்திரங்கள் காட்சிப்பொருளாக உள்ளன.

குதிரை மொழி திட்டம்

அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு குதிரை மொழி என்ற இடத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. திட்டத்திற்கு நிதியுதவி கிடைக்காமல் உலக வங்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் நிதி நிறுவனங்களில் இத்திட்டம் செயல்படுத்த தமிழக அரசு கடன் கேட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் குதிரை மொழி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இத்திட்டத்தை ஆய்வு செய்த அரசு 1350 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தாலும் அதுவும் வெறும் அறிவிப்போடு நின்றுபோனது.

அமைச்சர் அறிவிப்பு

இதன் பின்பு மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் 2021 ல் குதிரை மொழி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.2000 கோடியிலும், நரிப்பையூரில் 120 கோடியிலும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அறிவித்த அறிவிப்போடு கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்க முன் வருமா. 290 கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை