ஓடையை பயன்படுத்துவதில் இரு தரப்பினருக்கு பிரச்னை
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி அருகே தெற்கு மலை உள்ளது. அங்கு உற்பத்தியாகும் மழைநீர், கம்மாளப்பட்டி, ஜல்லுாத்துப்பட்டி வழியே பனமரத்துப்பட்டி ஏரிக்கு செல்லும். கம்மாளப்பட்டியில் ஒரு தரப்பினரின் தோட்டத்துக்கு செல்ல தடம் இல்லை. இதனால் மழைநீர் ஓடை வழியே, வீடு, தோட்டத்துக்கு சென்று, வருகின்றனர். மற்றொரு தரப்பினர், மழைநீர் ஓடை நிலத்தை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் ஓடையை பயன்படுத்துவதில் இரு தரப்பினர் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சேலம் - கம்மாளப்பட்டி சாலையில் இரு தரப்பினரும் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பனமரத்துப்பட்டி போலீசார் உடனே வந்து பேச்சு நடத்தினர். அப்போது வருவாய்த்துறை முன் அமைதி பேச்சு நடத்தி, தீர்வு காண்பதாக போலீசார் தெரிவித்தனர். பின் இரு தரப்பினரும் அமைதியாக சென்றனர்.