கட்சி கூட்டம், பொது நிகழ்ச்சி நடத்த இடம் ஒதுக்க வலியுறுத்தல்
பனமரத்துப்பட்டி மல்லுார் டவுன் பஞ்சாயத்து, சந்தைபேட்டையில் கலையரங்கம் உள்ளது. அதில், அரசியல் கட்சியின் பொதுக்கூட்டங்கள், ஊர் பொது நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். தற்போது, சந்தை மேம்பாடு திட்டத்தில், கலையரங்கம் முன் உள்ள சந்தை பேட்டை நிலத்தில், மேற்கூரையுடன், தனித்தனி கடைகள் கட்டும் பணி நடக்கிறது. அதனால், கலையரங்கில் கூட்டம் நடத்தினால், அதை பார்வையாளர்கள் நின்று பார்க்க இடமில்லை.இது குறித்து, அ.தி.மு.க., நகர செயலர் பழனிவேலு கூறுகையில்,'' மல்லுாரில் அரசு புறம்போக்கு நிலம் நிறைய இடங்களில் உள்ளது. அதை தனி நபர்கள் அனுபவித்து வருகின்றனர். கட்சி பொது கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சி, திருவிழாக்கள் நடத்த வருவாய்த்துறை, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும்,'' என்றார்.