வி.சி., கொடியுடன் அமைத்த தகர கொட்டகை அகற்றம்
ஏற்காடு,ஏற்காடு தாலுகா அலுவலகம் அருகே அரசு ஏகலைவா உறைவிட பள்ளி செயல்பட்டது. அங்கு அடிப்படை வசதி இல்லை எனக்கூறி, மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புலியூரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில், புது பள்ளி கட்டும் பணி நடக்கிறது. தற்காலிகமாக, சேலம், காரிப்பட்டியில் இப்பள்ளி இயங்கி வருகிறது.இந்நிலையில் பள்ளி கட்டும் இடம், மாது என்பவருக்கு சொந்தமானது என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம், அவர், வி.சி., பிரமுகர் கந்தசாமி உள்ளிட்ட அக்கட்சியினர், வி.சி., கொடியுடன் தகர கொட்டகை அமைத்தனர். ஏற்காடு தாசில்தார் செல்வராஜ், போலீசார், மாது, வி.சி., கட்சியினரிடம் பேச்சு நடத்தி கொட்டகையை அகற்றிக்கொள்ள எச்சரித்தனர்.நேற்று காலை வரை அகற்றாததால், அங்கு வந்த பழங்குடியின நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், ஏற்காடு தாசில்தார் செல்வராஜ், போலீசார் பாதுகாப்புடன், பொக்லைன் மூலம் கொட்டகையை அகற்றினர். மேலும் அவர்கள், அத்துமீறி நுழைந்து கொட்டகை அமைத்ததோடு, அதற்கு அரசு நிலத்தில் இருந்த சவுக்கு மரங்களை வெட்டியுள்ளனர் என, தலைமை ஆசிரியை செல்வராணி புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரித்து, மாது, கந்தசாமி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.