வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க உதவித்தொகை:சிறுபான்மையின மாணவர்களுக்கு அழைப்பு
சேலம்;முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்கள், வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:தமிழக அரசு சார்பில், 10 முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்கள், வெளிநாடுகளில் உயர்தரமான உயர்கல்வி படிக்க தலா ஒரு மாணவருக்கு, 36 லட்சம் ரூபாய் வீதம், 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 2025 - 2026ம் ஆண்டில், சர்வதேச அளவில் தரவரிசையில், முதல், 250 இடங்களை பிடித்துள்ள, பல்கலை மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்குள் உள்ள, பட்டப்படிப்பில், 60 சதவீதம், அதற்கு இணையாக தேர்ச்சி பெற்ற பொறியியல், மேலாண்மை, அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் ஆகிய பாடப்பிரிவுகளில், முதுகலை படிப்பில் சேர உள்ள முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம். அதற்கு, www.bcmbcmw.tn.gov.in/welfschemesminorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, விண்ணப்பங்களை தகுந்த சான்றிதழ்களுடன், 'கமிஷனர், சிறுபான்மை நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005' என்ற முகவரிக்கு, அக்., 31க்குள் அனுப்பவும்.