சங்கராபுரத்தில் பழுதாகி நிற்கும் குப்பை அள்ளும் பேட்டரி வாகனம்
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி சங்கராபுரத்தில் குப்பைகளை சேகரிக்க வழங்கப்பட்ட புதிய பேட்டரி வாகனங்கள் பழுதாகி பல மாதங்களாக வீணாக நிற்கிறது. சங்கராபுரத்தில் 18,000 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்த போது, ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் பெற்று வந்தது. இங்கு ஒப்பந்த, நிரந்தரமாக 80 துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்தனர். குப்பைகளை சேகரிக்க இங்கு போதிய வண்டிகள் இல்லை. இதனால், புதிதாக பேட்டரி வாகனங்கள் 30 வரை வாங்கினர். இந்த ஊராட்சியை காரைக்குடியுடன் இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தி 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் இங்கு துாய்மை பணிகள், ரோடு சீரமைக்கும் பணி, பாதாள சாக்கடை விரிவாக்க பணிகள் நடைபெறவில்லை. இங்கு வாங்கிய 30 குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகளில் 15க்கும் மேற்பட்ட வண்டிகள் பழுதாகி காட்சி பொருளாக நிற்கிறது. இதனால் குப்பைகளை சேகரிக்க போதிய வண்டிகள் இன்றி சிரமம் அடைகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது, பேட்டரி வண்டிகள் பழுதாகிநிற்பது குறித்து புகார் வந்தது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் சீர்செய்யப்படும். இதற்காக குப்பை அள்ளும் பணியில் எந்தவித தொய்வு இன்றி நடந்து வருகிறது என்றார்.