இறகுபந்து போட்டி: காரைக்குடிக்கு பதக்கம்
சிவகங்கை: முதல்வர் கோப்பைக்கான இறகுபந்து போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றனர். மாநில முதல்வர் கோப்பை இறகு பந்து போட்டி செங்கல்பட்டில் நடந்தது. இதில் பள்ளி மாணவிகள் பிரிவில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவிலும், மாணவி ரம்யா இரட்டையர் பிரிவிலும் விளையாடினர். இதில் ராஜராஜேஸ்வரி ஒற்றையர் பிரிவில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், ரூ.75,000 பரிசுத்தொகை, சான்று பெற்றார். இரட்டையர் பிரிவிலும் இவ்விரு மாணவிகள் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்று, தலா ரூ.50 ஆயிரம் பரிசு தொகை, சான்றுகளை பெற்றனர்.