அதிகரிக்கும் வெயில்: இளநீர் விலை ரூ.80 ஆக உயர்வு
திருப்புவனம்: தமிழகத்தில் கோடை முடிவடைந்தும் வெயிலின்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இளநீர் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மார்ச் கடைசியில் தொடங்கி ஜூலை வரை கோடை வெயிலின் தாக்கம் இருக்கும், இந்தாண்டு பிப்ரவரியிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கி ஆகஸ்ட் வரை தாக்கம் இருந்தது. செப்டம்பரில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை தொடங்கி விடும். வெப்பத்தின் தாக்கம் குறைந்து விடும், மழை காரணமாக கண்மாய்கள், கால்வாய்கள், வரத்து கால்வாய்களில் நீரோட்டம்இருக்கும் என மக்கள் கருதினர். ஆனால் இந்தாண்டு மழையும் இல்லை.கண்மாய், ஆறு, குளம், வரத்து கால்வாய் என எதிலும் தண்ணீரும் இல்லை. வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமிருப்பதால் பொதுமக்கள் இளநீர், பழச்சாறு, மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி தாகத்தை தணித்து கொள்கின்றனர். திருப்புவனம் பகுதியில் தென்னை விவசாயம் பெருமளவு செய்தாலும் விவசாயிகள் இளநீர் காய்களை அறுவடை செய்வதில்லை. காரணம் திருப்புவனம் பகுதி இளநீர் காய்களில் தண்ணீர் ருசியாக இருந்தாலும் குறைந்த அளவே தண்ணீர் இருக்கும், வெயிலின் தாக்கத்திற்கு இது போதுமானதாக இருக்காது, இளநீர் காய்கள்வெட்டிய பின் நான்கு நாட்களில் காய்களின் மேற்புறம் சுருங்கி விடும்.எனவே இளநீர் காய்களாக விற்பனை செய்வதுகிடையாது. ஆனால் கேரளா, பொள்ளாச்சி பகுதி காய்கள் பெரியதாக இருப்பதுடன் ஒரு வாரம் வரை காய்ந்து போகாமல் இருப்பதால் அந்த பகுதிகளில் இருந்து இளநீர் காய்கள் மொத்தமாக வாங்கி வந்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் கூறுகையில், மதுரை மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம், பொள்ளாச்சி காய்களில் 750 மி.லி., முதல் ஒரு லிட்டர் வரை தண்ணீர் இருக்கும். நாட்டு காய்களில் அவ்வளவாக தண்ணீர் இருக்காது, இளநீர் காய்களின் தேவை அதிகமிருப்பதால் மதுரை மார்க்கெட்டிலேயே இளநீர் காய்கள் 55 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். வேன் வாடகை, ஏற்றி இறக்க கூலி உள்ளிட்டவை வைத்து 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வரும் நாட்களில் இன்னும் இளநீர் காய்களின் விலை 100 ரூபாயை தொட வாய்ப்புள்ளது.மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக தென்னை மரங்களில் குரும்பைகள்உதிர்ந்து விடுவதால் விளைச்சலும் பாதிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.