உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

சிவகங்கையில் நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மானாவாரி, கிணற்று பாசனம் மூலம் 1.5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். இந்நிலையில் அக்., 11 முதல் மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. மானாவாரியாக நெல் நடவு செய்து, களைக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட செலவினம் மூலம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். நெற்பயிர்கள் முளைத்து வரும் நிலையில், பலத்த மழைக்கு தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து, நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.மானாமதுரையில் பலத்த மழைக்கு வாழை மரங்கள் சாய்ந்தன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளுக்கு அருகில் உள்ள காலியிடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கின்றன. இதனால், மண்சுவரால் கட்டப்பட்ட 64 ஓடு, கூரை வீடுகள் பகுதி, முழுவதுமாக சேதமாகின.நிவாரண தொகை கணக்கெடுப்பு: பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறியதாவது: பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தி, நிவாரண தொகைக்கு அரசுக்கு எழுதி அனுப்பியுள்ளனர். வீடுகளை இழந்தவர்களுக்கு உடனுக்குடன் நிவாரண தொகை வழங்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை