இடிக்கப்பட்ட வகுப்பறைக்கு பதில் புதிய அறை கட்டப்படுமா ; ஆய்வகத்திற்காக 7.கி.மீ செல்லும் மாணவர்கள்
மானாமதுரை அருகே உள்ள பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெரிய கோட்டை, தெக்கூர் மற்றும் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 180 க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறைகள் இல்லை. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆய்வக வகுப்பறை மற்றும் உபகரணங்கள் இல்லாததால் இங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்படுகிறது. போதிய வகுப்பறைகள் இல்லாததால் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனர். கழிப்பறைகளும் போதுமான அளவு இல்லாததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மாணவிகள் பள்ளி நேரத்தில் கழிப்பறைகளை பயன்படுத்தாமல் வீடுகளுக்கு சென்ற பிறகு கழிப்பறைகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் பார்வையிட்டு உடனடியாக இடிப்பதற்கு உத்தரவிட்ட நிலையில் தற்போது கட்டடங்கள் இடிக்கப்பட்ட பிறகு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு பள்ளியில் உள்ள அவல நிலையை போக்க வேண்டுமென பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.