உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டப்பணி மும்முரம்: இஸ்ரோ தகவல்

மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டப்பணி மும்முரம்: இஸ்ரோ தகவல்

தென்காசி:“மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்யும் ககன்யான் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன,”என, இஸ்ரோவின் 'ஆதித்யா எல் 1' திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி கூறினார்.சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டுள்ள 'ஆதித்யா எல் 1' விண்கல திட்டத்தின் இயக்குனர் நிகர் ஷாஜி. தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர். அவர் தாம் பயின்ற பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளுக்கு நிதியுதவி செய்து வருகிறார். கடையநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியருடன் நேற்று முன் தினம் கலந்துரையாடினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் ஜோஸ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பின், நிகர் ஷாஜி நிருபர்களிடம் கூறியதாவது:இஸ்ரோவின் பணி தொடர்ச்சியானது. அடுத்தது சந்திரயான், ககன்யான் என பல்வேறு பணிகள் இஸ்ரோ மூலம் நடக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வுகளுக்காக இஸ்ரோவின் இரண்டு சாட்டிலைட்டுகள் இயங்கி வருகின்றன. அவற்றின் மூலம் தகவல்களை பெற்று வானிலை ஆய்வுகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆதித்யா எல் 1 தரும் தகவல்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்கிறார்கள். விண்வெளி ஆய்வு என்பது எல்லா நாடுகளுக்கும் அவசியமானதாகி விட்டது. சர்வதேச அளவில் விண்கல ஆய்வுக்கான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு பேரை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்யும் திட்டம் உள்ளது. அதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. கோள்களை ஆய்வு செய்வதற்கான திட்டமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி