உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சிகளில் நிதி ஒதுக்கீடு இன்றி வளர்ச்சி பணிகள் முடக்கம்

ஊராட்சிகளில் நிதி ஒதுக்கீடு இன்றி வளர்ச்சி பணிகள் முடக்கம்

கம்பம்: ஊராட்சிகளில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளது. ஊராட்சிகளுக்கு மாநில நிதிக் குழு மானியம், 15 வது நிதிக் குழு மானியம் ஆகிய இரண்டு நிதி ஒதுக்கீடுகள் உள்ளன. இதில் மாநில நிதிக் குழு மானியம் ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை மாதந்தோறும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி சம்பளம், தெருவிளக்கு, பொதுச் சுகாதார பராமரிப்பு பணிகள் மேற்கொள்கின்றனர். மத்திய அரசு சார்பில் 15 வது நிதிக்குழு மானியம் ஊராட்சிகளின் பரப்பு, மக்கள் தொகை அடிப்படையில் ஆண்டிற்கு ஒரு முறை ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த நிதியை பயன்படுத்தி சமுதாய கழிப்பறை, மகளிர் சுகாதார வளாகம், சிமென்ட் ரோடு, பைப் லைன் பதித்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்த ஒதுக்கீடுகள் கிடைத்து விடும். ஆனால் இந்தாண்டு வளர்ச்சி பணிகள் தொடர்பான மதிப்பீடுகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. ஆனால் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு இன்னமும் விடுவிக்கவில்லை. ஆண்டு நிறைவடையும் நிலைக்கு வந்த போதும் நிதி ஒதுக்கீடு இல்லை. இதனால் ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. 15 வது நிதிக்குழு மானியத்தை விரைந்து விடுவித்து ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு முன்வர கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி