உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய விசாரணை கைதி

நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய விசாரணை கைதி

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நீதிபதி இருந்த அறையை நோக்கி செருப்பு வீசிய வட மாநில விசாரணை கைதியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். மத்திய பிரதேச மாநிலம், ரீவா மாவட்டத்தை சேர்ந்தவர் திரேந்திர சிங், 30. இவர் மீது திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த திருட்டில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. திருநெல்வேலி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த அவரை, சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஒரு திருட்டு வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று போலீசார் அழைத்து சென்றனர். நீதிமன்றம் அறைக்கு வெளியே போலீஸ் பாதுகாப்புடன் அவர் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அப்போது திடீரென நீதிபதி அருண்சங்கர் அமர்ந்திருந்த அறையை நோக்கி, கைதி தன் செருப்பை கழற்றி வீசினார். செருப்பு யார் மீதும் படவில்லை. ஆனால், அறைக்குள் விழுந்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு எழுந்தது. பின், திரேந்திர சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி