தி.மு.க., அமைப்பாளர் கொலை: ஐவருக்கு ஆயுள்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் முத்துராமன் 34, கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.வள்ளியூரைச் சேர்ந்த முத்துராமன் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். கட்சி நிகழ்ச்சிகளில் வரவேற்பு பேனர் வைப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2020 செப்., 13ல் அதே ஊரை சேர்ந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது.பணகுடி போலீசார் இதில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகர் மற்றொரு முத்துராமன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. தி.மு.க., பிரமுகர் மற்றொரு முத்துராமன், ராம்கி, தில்லை, குணா, தங்கவேல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பளித்தார்.