கான்ட்ராக்டர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.முருகன், 65; நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர். அ.தி.மு.க., பிரமுகரான இவர், திருச்செந்துார் முதல் பாபநாசம் வரை, திருநெல்வேலி முதல் தென்காசி வரை என, பல்வேறு நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.அண்மையில் இவரது மகன் திருமணத்தை திருநெல்வேலியில் தடபுடலாக நடத்தினார். அந்த வீடியோ பரவியது. திருமணத்தில் வருமானவரித்துறை உயர் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், -- ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று மாலை திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மாலையில் துவங்கிய சோதனை இரவிலும் தொடர்ந்தது.