| ADDED : ஜூலை 11, 2025 02:22 AM
வள்ளியூர்:மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர் சிறுவன் உடலை வாங்க மறுத்தனர்.திருநெல்வேலி அடுத்துள்ள வெள்ளக்கோவிலை சேர்ந்த மாரியப்பன் மகன் சேர்மதுரை, 13, வடக்கன்குளம் சி.எம்.எஸ்., விடுதியில் தங்கி, எட்டாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம், விடுதி வளாகத்தில் உள்ள மூடி போட்ட கிணற்றுக்குள் மூழ்கி இறந்து கிடந்தார். வள்ளியூர் தீயணைப்பு படையினர் சிறுவன் உடலை மீட்டனர். மாரியப்பன், தன் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தார். நேற்று, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடிந்த சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முயற்சித்தனர். பெற்றோர், உறவினர்கள் உடலை பெற மறுத்தனர். 'சிசிடிவி காட்சிகளை மறைக்கின்றனர். விடுதி வார்டன்கள் பேச மறுக்கின்றனர்' எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்திற்கு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி நீதி விசாரணை கேட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.