ஓய்வு அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
அம்பாசமுத்திரம்: சாலையில் பிறந்த நாள் கொண்டாடியவர்களை தட்டி கேட்டவர் வீடு மீது, பெட்ரோல் குண்டு வீசிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே முடப்பாலத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 65; எல்.ஐ.சி., அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு, சில வாலிபர்கள் சாலையில் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடி கூச்சலிட்டனர். அதை ரவிச்சந்திரன் கண்டித்தார். வாலிபர்கள் கேட்காததால், போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவர்களை கண்டித்து அனுப்பினர்.இந்நிலையில், நள்ளிரவு, 1:00 மணியளவில், ரவிச்சந்திரன் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், வீட்டின் முன் பகுதி சேதமடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரவிச்சந்திரன் புகாரில், முடப்பாலத்தைச் சேர்ந்த சுனில்ராஜ், 20, முகேஷ், 20, மூர்த்தி, 20, முத்து, 24, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.