உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் அரசு பொதுத்தேர்வு 253 மையங்களில் 89,836 மாணவர்கள் பங்கேற்பு

திருவள்ளூரில் அரசு பொதுத்தேர்வு 253 மையங்களில் 89,836 மாணவர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வினை 253 மையங்களில், 89,836 மாணவர்கள் எழுத உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 2024 -- 25ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு மார்ச் 3ல் துவங்கி, ஏப்.,15 வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்காக, மாவட்டம் முழுதும் மொத்தம், 253 மையங்கள் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளன.பிளஸ் 2 தேர்வு மார்ச் 3, பிளஸ் 1 தேர்வு மார்ச் 5ம் தேதி துவங்கி, 27 வரை தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 28 முதல், ஏப்.15 வரை தேர்வு நடக்கிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து, 13,504 மாணவர்கள்; 15,010 மாணவியர் என, மொத்தம், 28,514 பேர் தேர்வு எழுதுகின்றனர். போல் பிளஸ் 1 பொதுத்தேர்வில், 14,111 மாணவர்கள், 15,514 மாணவியர் என மொத்தம் 29,625 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 109 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 144 தேர்வு மையங்களில், 15,827 மாணவர்கள், 15,870 மாணவியர் என, 31,697 பேர் தேர்வு எழுத உள்ளனர்.அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள், 18 மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:இந்த ஆண்டு, அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் உத்தரவின்படி, பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்காக, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி மற்றும் ஆவடி ஆகிய நான்கு இடங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.அவர்களுக்கு, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மதிய உணவு, டீ, பிஸ்கெட் உடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்வு கூடங்களில் வசதி கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பொதுத் தேர்வு நடைபெறும் 253 மையங்களில், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக, போக்குவரத்து, தடையில்லா மின்சாரம் இருப்பதை கல்வி, போக்குவரத்து மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும்.அரசு பொதுத் தேர்வு எதிர்கொள்ள மாணவர்களை நல்ல முறையில் தயார்படுத்தி வைக்க வேண்டும்.- மு.பிரதாப்,கலெக்டர், திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !