கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ விபத்து திருத்தணியில் புதுமண தம்பதி காயம்
திருத்தணி, திருத்தணி நகராட்சி கலைஞர் நகரை சேர்ந்தவர் பாலாஜி 29. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா, 26 என்பவருக்கும் நேற்று காலை திருத்தணி முருகன் மலைக்கோவிலில் திருமணம் நடந்தது. பின் புதுமண தம்பதி, அவர்களது உறவினர் சசி, 59 ஆகியோர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின், மலைக்கோவிலில் இருந்து மூவரும் ஆட்டோ வாயிலாக வீடு திரும்பினர். ஆட்டோவை, திருத்தணி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த முத்து, 32 என்பவர் ஓட்டினார். மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கியபோது, காட்ரோடு அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த நீதிமன்ற வளாக தடுப்பு சுவர் மீது மோதி ஆட்டோ நின்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர், புதுமண தம்பதி உட்பட நால்வரும் பலத்த காயமடைந்தனர். திருத்தணி போலீசார் நால்வரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.