| ADDED : ஜூலை 21, 2024 06:42 AM
பொன்னேரி: தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் சார்பில், கட்டுமான தொழிலாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.பொன்னேரி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உதவி ஆணையர் செல்வராஜ் தெரிவித்து உள்ளதாவது:இந்த பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல்.டி., கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இது மூன்று மாதம் காலம் மற்றும் ஏழு நாட்கள் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.பயிற்சி பெறும் தொழிலாளர்கள் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஐந்து முதல், 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., படித்த, 18 -40 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கு பெறலாம்.கொத்தனார், கம்பி வளைப்பவர், கட்டுமான எலக்ட்ரீஷியன் ஆகியவற்றிற்கு மூன்று மாதம் பயிற்சிகள் அளிக்கப்படும். மற்றொரு திறன் மேம்பாட்டு பயிற்சியானது, ஏழுநாட்கள் நடைபெறும். இதில், கலந்து கொள்பவர்களுக்கு, தினமும் 800 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.பயிற்சி கட்டணம் எதுவும் கிடையாது. உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.ஆகஸ்ட் 6ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றுடன், பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கொக்குமேடு பகுதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.