அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஆமைவேகத்தில் வகுப்பறை கட்டும் பணி
திருத்தணி: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி ஆமைவேகத்தில் நடப்பதால் மாணவியர் சிரமப்படுகின்றனர். திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1400க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால் மாணவியர் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம், 1.42 கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக ஆறு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று வகுப்பறை கட்டட பணிகள் துவக்கி வைத்து, ஆறு மாதத்திற்குள் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என கூறினார். ஆனால் பணி எடுத்த ஒப்பந்ததாரரால் ஆமை வேகத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. எட்டு மாதங்கள் ஆகியும் தற்போது, வகுப்பறைகளுக்கு கான்கீரிட் தளம் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, ஆறு வகுப்பறை கட்டடங்களுக்கு பூசு வேலை, வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகள் உள்ளன. இப்பணிகள் முடிப்பதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதம் ஆகும். குறித்த நேரத்தில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டாதால், மாணவியர் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் புதிய கட்டடம் கட்டும் பகுதியில் தான் மாணவியர் கழிப்பறைகள் உள்ளதால், மாணவியர் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய வகுப்பறை கட்டடப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்கின்றனர்.