திருமுல்லைவாயில் அராபத் ஏரியில் 2வது நாளாக செத்து மிதக்கும் மீன்கள்
ஆவடி, திருமுல்லைவாயில், அராபத் ஏரியில் இரண்டாவது நாளாக நேற்றும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால், ஏற்பட்டுள்ள பீதியால், திருவள்ளூர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் நீரின் மாதிரியை, நேற்று ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையை ஒட்டி நீர்வளத்துறைக்கு சொந்தமான அராபத் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி, 25 ஆண்டுகளுக் கு முன் 100 வீடுகள் மட்டுமே இருந்தன. பகுதிமக்களின் நீராதாரமாக விளங்கிய அராபத் ஏரி, கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால், 65 ஏக்கர் பரப்பில் இருந்து 38 ஏக்கராக சுருங்கி உள்ளது. தற்போது, ஏரியை சுற்றியுள்ள மணிகண்டபுரம், சரவணா நகர் மற்றும் ஸ்ரீனிவாசா நகர் பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக ஏரியில் கலந்து ஏரி மாசடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022 ஏப்., 10ம் தேதி, ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த, தேசிய பசுமை தீர்ப்பாய திடக்கழிவு மேலாண்மை குழு அதிகாரிகள், ஏரியை துாய்மைப்படுத்த வேண்டும் என, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினர். இதையடுத்து, அமைச்சர் நாசர் பார்வையிட்டு, 'ஏரியை மேம்படுத்தி படகு குழாம் அமைக்கப்படும்' என தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தின ம் ஏரியில் டன்கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இரண்டாவது நாளாக நேற்றும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள், இது வரையில் 2 டன் மீன்களை அகற்றி உள்ளனர்.
இது தான் சரியான நேரம்
இது குறித்து சமூக ஆர்வலர் சுந்தரமூர்த்தி கூறியதாவது: அராபத் ஏரி கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. கண்துடைப்புக்காக இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் முறையாக இயங்கவில்லை. பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் கழிவுநீரை வடிகாலில் வெளியேற்றி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மீன்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு, 2 அடி ஆழத்திற்கு பாதாள சாக்கடை கழிவு தேங்கி உள்ளது. இதனால் தான், மீன்கள் செத்து மிதக்கின்றன. இது தான் சரியான நேரம், உடனடியாக ஏரியை துார்வாரி துாய்மைப்படுத்தி, 'ஷட்டர்' அமைத்து பாதுகாக்க வேண்டும். இதன் மூலம், வரும் மழைக்காலத்தில் நன்னீரை சேமித்து வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏரியில் ரூ.1.50 கோடியில்
விரைவில் மேம்பாடு பணி
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயங்கி வருகிறது. கழிவுநீர் கலப்பால் மீன்கள் இறக்கவில்லை. போதுமான நீர் இல்லாததால் தான், மீன்கள் செத்து மிதக்கின்றன. திருவள்ளூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏரி நீரின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளது. அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் ஏரியை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.