ஏரி உபரிநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பால் அவதி
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீரமங்கலம் ஏரியின் உபரிநீர் கால்வாய் வழியாக, அஸ்வரேவந்தாபுரம் ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. வீரமங்கலம் ஏரி முதல் அஸ்வரேவந்தாபுரம் ஏரி வரையிலான வயல்வெளியில் உள்ள பல்வேறு கால்வாய்கள் வழியாக உபரிநீர் செல்கிறது. இதில், ஒன்றிரண்டு கால்வாய்கள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. ஐந்துக்கும் மேற்பட்ட கால்வாய்கள் துார்ந்து போயுள்ளன. தற்போதுள்ள கால்வாய்களில், ஏரியின் உபரிநீருடன், கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால், வயல்வெளியில் கழிவுகள் மிதக்கின்றன. துர்நாற்றம் வீசும் கழிவுநீரில் இறங்கி, விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்கும் வயலில் நடவு மற்றும் களை பறிப்பு பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் முன்வருவது இல்லை. இதனால், விவசாய பணிகள் பாதிக்கப் படுகின்றன. உபரிநீர் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.