மாவட்டத்தில் 6 புதிய மருத்துவ கட்டடம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திறப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 6 புதிய மருத்துவ கட்டடம் உட்பட, 4.28 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் அகரமேல் துணை சுகாதார நிலையம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகிய இடங்களில், 4.28 கோடி மதிப்பில் ஆறு புதிய மருத்துவ கட்டடம், உயர் மருத்துவ உபகரணம் மற்றும் வாகனம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தினை துவக்கி வைத்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் அகரமேல், கந்தசாமி நகர், குன்னவலம், மாநெல்லுார் துணை சுகாதார நிலையங்கள், சோரஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், பேரம்பாக்கம் சித்தா பிரிவு ஆகிய இடங்களில் கூடுதல் கட்டடங்கள், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளன. பல்வேறு மருத்துவ உபகரணம் மற்றும் வாகனங்கள் என, மொத்தம், 4.28 கோடி ரூபாய் திட்டப்பணி துவக்கப்பட்டு உள்ளது.மாவட்டத்தில், திருத்தணி, பொன்னேரி, வங்கனுார், வெள்ளியூர், வெங்கத்துார், புட்லுார் உள்ளிட்ட மருத்துவமனைகளில், 67.85 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் மருத்துவ உட்பட்ட அமைப்பு வசதிகளில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியாராஜ் - திருவள்ளுர், பிரபாகரன் - பூந்தமல்லி, நகராட்சி தலைவர் உதயமலர் உட்பட பலர் பங்கேற்றனர்.
'எமர்ஜென்சி' வார்டு முன்
வரவேற்பு மேஜைதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை வரவேற்க, காலை 8:00 மணிக்கே, 'எமர்ஜென்சி' வார்டு நுழைவு வாயிலில் வரவேற்பு மேஜை அமைத்தனர். இதற்காக, அந்த வழியாக நோயாளிகள், பொதுமக்களை அனுமதிக்கவில்லை.இந்நிலையில், வெள்ளியூர் அரசு பள்ளியில், மயக்கமடைந்த பிளஸ் 2 மாணவன் ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வந்த போது, அதை போலீசார் அனுமதிக்காததால், 'ஸ்ட்ரக்சரில்' அழைத்துச் சென்றனர். அதன் பின், மக்கள் எதிர்ப்பை கருதி, வரவேற்பு மேஜையை, கீழ் தளத்திற்கு மாற்றினர்.