பகிம்ஹாம் கால்வாய் பாலம் பராமரிப்பு பணி படுமோசம் மரம், செடிகள் வளர்ந்து பலவீனம்
மீஞ்சூர், மீஞ்சூர் அடுத்த வல்லுார் சாலை சந்திப்பில் இருந்து எண்ணுார் துறைமுகம் மற்றும் வடசென்னை அனல் மின்நிலையங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இதில், வடசென்னை அனல் மின்நிலையம் முதல்நிலை அருகே, பகிம்ஹாம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது.பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் மரம், செடிகள் வளர்ந்துள்ளது. நடைபாதைக்காக அமைக்கப்பட்ட பகுதிகளிலும் செடி, கொடிகள் வளர்ந்திருப்பதால், நடந்து செல்வோர் சாலையில் பயணிக்கின்றனர். இதனால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.பாலம் பராமரிப்பு இன்றி இருப்பதால், பலவீனம் அடைந்து வருகிறது. இந்த பாலத்தின் வழியாக வடசென்னை அனல் மின்நிலையம் ஒன்று மற்றும் இரண்டு, வடசென்னை - 3 ஆகியவற்றிற்கு செல்லும் வாகனங்கள், எண்ணுார், கத்திவாக்கம் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.இந்த பாலம் பல ஆண்டுகளாக பராரிக்கப்படாமல் இருப்பதால், மேலும் பலவீனமடையும் முன், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.